வாள் ஒன்றை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரைக் கைதுசெய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(23) இரவு சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே 39 வயதுடைய சந்தேக நபர் வாளுடன் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் சென்னல் கிராமம் 02 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இரண்டரை அடி நீளமான வாள் ஒன்றும் சந்தேகநபர் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரை சான்றுப் பொருட் களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத்தின் வழிகாட்டலில் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பாறுக் ஷிஹான்)
