🌧️ நான்கு நாட்களில் 661 மி.மீ. மழை! – வட்டவளையில் அதிகரிக்கும் மண்சரிவு அபாயம்
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வட்டவளை பகுதியில் கடந்த நான்கு நாட்களில் 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று (03) மாத்திரம் வட்டவளையில் 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது அன்றைய தினத்தில் நாடு முழுவதும் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவிலும் கடந்த மூன்று நாட்களில் 150 முதல் 500 மில்லிமீற்றர் வரையான கனமழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌧️ காலநிலை மாற்றத்தின் தாக்கமா?
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக குறுகிய காலப்பகுதிக்குள் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகும் நிலை தற்போது அதிகரித்து வருவதாக கலாநிதி வசந்த சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போதைய மழை நிலைமையை முன்னர் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியுடன் ஒப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதியில் இதைவிட அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
⚠️ மலையகத்தில் அதிகரிக்கும் அபாயம்
தொடர்ச்சியான கனமழை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதனால் அபாய வலயங்களில் வசிக்கும் மக்கள் வானிலை நிலவரம் மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளை தொடர்ந்து அவதானித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



