விஜய்க்கு எதிரான பேச்சு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பாக தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக வெற்றிக் கழக அரசு மெத்தனமாக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கத் தவறியதாக தமிழக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்துக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றினார்.
அப்போது காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள் வறண்டு, அப்பகுதி பாலைவனம் போன்று காட்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தங்களது தலைவர் முதல்வராக இருந்திருந்தால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதன்போது தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக உதயநிதி பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
🚨 உதயநிதிக்கு எதிராக காவல்துறையில் நடவடிக்கை
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில், உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக மகளிரணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதல்வர் விஜய்க்கு எதிராக அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் உதயநிதி ஸ்டாலினை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



