தாக்குதல் இடைநிறுத்தம் எதிரொலி: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவு
அமெரிக்கா மற்றும் ஈரான் தொடர்ந்து இரண்டாவது நாளாக இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்காமல் இருப்பதால், சர்வதேச மசகு எண்ணெய் சந்தையில் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
செப்டம்பர் மாத விநியோகத்திற்கான பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 4.9 சதவீதம் சரிந்து, ஒரு பீப்பாய்க்கு 92.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒக்டோபர் மாத விநியோகத்திற்கான பிரென்ட் எண்ணெய் 4.6 சதவீதம் வீழ்ச்சியடைந்து 87.48 டொலராகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) எண்ணெய் 5.6 சதவீதம் குறைந்து 84.34 டொலராகவும் வர்த்தகமாகியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா ஈரான் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. தற்போது தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஈரான் துறைமுகங்களை நோக்கிய அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து அமலில் உள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கடந்த வாரம் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 102 டொலர் வரை உயர்ந்திருந்தது.
இதற்கிடையில், அமெரிக்காவில் சாதாரண பெட்ரோலின் சராசரி விலையும் ஒரு கேலனுக்கு 4.11 டொலராக உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கும் சூழலில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.



