பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் பங்களாதேஷ் திரும்ப ஆயத்தமாகி வரும் சூழலில், நாட்டின் ஜனாதிபதியும் அவரது நீண்டகால அரசியல் நண்பருமான முகமது ஷஹாபுதீன் தனது பதவியை இராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக வெளியுறவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டு அந்நாட்டில் வெடித்த தீவிர மாணவர் போராட்டங்களின்போது சுமார் 1,400 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொடூர குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தன் மீதான வழக்குகளைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதற்காகத் தான் விரைவில் பங்களாதேஷ் திரும்பவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஹசீனா உறுதிப்படுத்தியிருந்தார். அவரது இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஜனாதிபதியின் திடீர் இராஜிநாமா குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை, தற்போது வைத்திய சிகிச்சைக்காகத் தாய்லாந்து சென்றுள்ள பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது நாடு திரும்பியவுடன், ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது உத்தியோகபூர்வ இராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஆளும் பங்களாதேஷ தேசியவாதக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டு வரும் பலமான அரசியல் அழுத்தமே இதற்குக் முக்கிய பின்னணியாக பார்க்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ஹசீனாவின் வருகை மற்றும் ஜனாதிபதியின் இராஜிநாமா முடிவுகள் பங்களாதேஷத்தின் அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



