முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும், இதனால் ஏற்பட்ட கடும் அதிருப்தியின் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து அரசியலில் இருந்து விலகியதாகவும் அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை வகித்த காலத்தில் தான் ஒருபோதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும், இதனை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்கு அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் தான் வெறுமனே பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்பட்டதாகவும், தனக்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே தன்னிச்சையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அரசியலில் இருந்து விலகியதாகவும், அதன் பின்னரே அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டதாகவும் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
தூதுவர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், இலங்கையின் நலனுக்காக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பல்வேறு ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுக்க முடிந்ததாகத் தெரிவித்த அவர், தூதுவராகவும் அரசியல்வாதியாகவும் நாட்டுக்கு தன்னால் இயன்ற சேவைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றியமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் மகிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.



