வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பாஸிக் தொடர்பான விசாரணைகளில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸாரின் விசாரணைகளின்போது, கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஐந்து விடுதிகள் தமக்குச் சொந்தமானவை என ஷிரான் பாஸிக் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்கள், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஷிரான் பாஸிக்கை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் தலைமறைவாகியிருந்த 48 வயதான ஷிரான் பாஸிக், அங்கு கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்மைக்காலங்களில் நாட்டின் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்களுடன் ஷிரான் பாஸிக்கிற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக, 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடனும் அவர் தொடர்புபட்டிருந்தாரா என்பது தொடர்பிலும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.



