பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணர் சடலமாக மீட்பு
பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணராக பணியாற்றிய, கண்டியைச் சேர்ந்த திருமணமான வைத்தியர் ஒருவர் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் நேற்று (23) காலை பணியில் ஈடுபட்டிருந்த பின்னர் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று (24) மஹியங்கனை, மாபகடாவெவ பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பாறையொன்றின் அருகிலிருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியரின் உடலுக்கு அருகில் ஒருவகை மருந்து மற்றும் மாத்திரைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், குறித்த வைத்தியரின் கார் மஹியங்கனை நோக்கிச் சென்ற காட்சி பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



