அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறைந்து வருகிறதா? – ட்ரம்ப் மறுப்பு
அமெரிக்காவின் முக்கிய ஆயுதங்களின் கையிருப்பு குறைந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமெரிக்காவிடம் தற்போது மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய தகவல்களை அவர் “தேசத்துரோகமானவை” எனக் குறிப்பிட்டதுடன், தகவல்களை கசியவிட்டவர்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானுடனான தற்போதைய மோதலுக்கு மத்தியில், பென்டகனிடம் உள்ள சில நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்தத் தகவல்களை வெள்ளை மாளிகையும் பென்டகனும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



