முன்னாள் பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன .
கடந்த வெள்ளிக்கிழமை காலை, தனது மனைவி பிரியங்கி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுடன் வழக்கமான காலை நடைப்பயிற்சிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, C.D விக்ரமரத்ன தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற தகவல் வெளியானது.
சம்பவம் நிகழ்ந்தபோது விளையாட்டு உடையும் வெள்ளை நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்த அவர், மனைவி காலணியை அணிந்து முடிக்கும் வரை வீட்டின் முன்புறத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்த நவீன ரக ரிவால்வரை பார்த்து அதை பரிசோதிக்க விரும்பியதாகவும், அதில் குண்டுகள் இல்லையா என்று நகைச்சுவையாகக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியின் மகசினை அகற்றி அவரிடம் கொடுத்ததாகவும், பின்னர் தண்ணீர் எடுக்க சமையலறைக்குச் சென்றபோது திடீரென ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் உடனடியாக முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
CD விக்ரமரத்ன தவறான முடிவெடுத்துகொண்டார் என்ற கருத்தை அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மரணத்திற்கு முந்தைய நாட்களிலும் அவர் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
கண் பரிசோதனைக்கான நேரத்தை முன்பதிவு செய்திருந்ததோடு, நண்பரைச் சந்திக்கவும், ஜூலை 31ஆம் திகதி நடைபெறவிருந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார்.
சம்பவம் நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்புகூட தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் “காலை வணக்கம்” செய்தி அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தனது இளைய மகனின் குடும்பப் பிரச்சினையால் அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களையும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
மகன் கைது செய்யப்பட்டதாக அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களும் முற்றிலும் பொய்யானவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏழு மாத வயதுடைய பேத்தியை மிகவும் நேசித்த அவர், அவளை பள்ளிக்குச் செல்லும் நாளைக் காண ஆவலுடன் இருந்ததாகவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் குறித்த நூல் ஒன்றை எழுதி வந்ததாகவும், அதன் வரைவை நண்பர்களிடம் கருத்துக்காக அனுப்பியிருந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.



