சமகால அரசியல் சூழலில் ராஜபக்ச குடும்பத்தினருக்கே சவாலாக அமையும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெறும் அரசியல் கலந்துரையாடல்களின்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு மட்டுமன்றி சில சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாமல் கருத்துகளை வெளியிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் விவசாயிகளை சந்தித்திருந்த சந்தர்ப்பத்திலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாமல் ராஜபக்ச கடுமையாக விமர்சித்திருந்தமை அரசியல் மட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதேவேளை, நாமல் ராஜபக்ச முன்னெடுத்து வரும் அரசியல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
மக்கள் மத்தியில் இழந்துள்ள செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம், கோட்டாபய ராஜபக்ச தனது அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கான அடித்தளமாக 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி ‘வியத்மக’ அமைப்பை உருவாக்கியிருந்தார். மருத்துவர் நாலக கொடஹேவ மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்டோர் அதன் ஆரம்பகால நிறுவனர்களாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நாமல் ராஜபக்சவின் தற்போதைய அரசியல் பிரசார இயக்கம் மிலிந்த ராஜபக்ச, இராஜ் வீரரத்ன மற்றும் அர்ஜுன் கமலநாத் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், எதிர்கால அரசியல் பிரசாரங்களில் ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கடுமையான அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்ற கருத்தும் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.



